Friday, May 29, 2020

கொல்லும் பசி கொல்வேனடி

ஓலைக் குடிசையோரம்
உலவுந் தென்றல்போலே
மாலையில் வருவாளடி - கிளியே
மாற்றி வழிசெல்வாளடி!

காலைக்குள் இராப்பொழுதைக்
கட்டிவைத்த ஞாயிறுபோல்
சேலைக்குள் தான்மறைந்தே - கிளியே
தேகத்தை எரிப்பாளடி

நாளுமொரு வேடமிட்டு
நகர்ந்து வரும்நிலவாய்
வேளைக்கோர் உடைஉடுத்திக் - கிளியே
வேகவைத்துத் போவளடி

வாளுக்குக் கூர்முனைபோல்
வடித்த விழியழகு
வாவென்று சொல்வாளடி - கிளியே
வருமுன் மறைவாளடி

பாழாகிப் போகும்முன்னே
பக்கம்வந்து சேர்த்தணைத்துப்
பாலாகி இனித்தாளடி - கிளியே
பாதிவுயிர் காப்பேனடி!

ஏழாகி இசைப்பாட்டை
இணைத்தாளும் செந்தமிழாள்
கூழாகி வந்தாளடி - கிளியே
கொல்லும்பசி கொல்வேனடி!


Thursday, May 7, 2020

பார்ப்பனியத்தை சாடிய புரட்சிக் கவிஞர்- துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்

இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க்கவியும், தமிழ் இசையும் - தமிழர்களுடைய முன்னேற்றத் துக்கும், தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க, ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் (புரட்சிக் கவிஞர்) ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன் படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது."
தமிழினத்தின் வெற்றி புரட்சிக்கவிஞர் பாத்திறத் தில் இருப்பதைக் கண்டு பாராட்டி வரவேற்கும் தந்தை பெரியாரின் மதிப்பீடு இது. உண்மைதான்! தந்தை பெரியார்தம் கொள்கையின் கவிதை வடி வமே பாவேந்தர். ஜாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை, பார்ப் பனிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவின் சிறப்பு, தமிழ் - தமிழர் எழுச்சி, மனித சமத்துவம் என பெரியாரின் எண்ணங்களை தமது பாட்டுத் திறத்தால் எதிரொலித்தவரே புரட்சிக் கவிஞர்!
பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடியவர் புரட்சிக் கவிஞர். பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர் களின் சூழ்ச்சி வலைகள் எப்பேர்ப்பட்டவை, பார்ப்பன ஆதிக்கத்தைப்பாதுகாப்பவை எவை, கொடுமையான குள்ளநரிக் கூட்டத்தின் கொட்டத்தை திராவிடச் சமுதாயம் - தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதைப் பற்றியெல்லாம் தன்மானத் தலைவர் தந்தை பெரியாரின் அறிவுறுத்தல் - கருத்தாக்கம் எதுவோ... அதுவே புரட்சிக் கவிஞரின் புரட்சி மொழி. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்களே, அதுபோல புரட்சிக் கவிஞர் ஆக்கிய பாடல் வரிகளில் பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
"பார்ப்பான்பால் படியாதீர்
பார்ப்பான் சொற்க்குக் கீழ்ப்படியாதீர்
...........................
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன்போல் நம்ப வேண்டாம்!" - இப்படி எச்சரிக்கை செய்கிறார் புரட்சிக்கவிஞர். பார்ப்பான் ஏய்க்கப் பார்ப்பான், தீதுறப் பார்ப்பான் என்றதோடு பார்ப்பான் பால் படிந்தால் நாடும், நந்தமிழர் வாழ்வும் சீர்கெடும் - கீழிறக்கம் பெறும். அடுத்துக் கெடுப்பதே அவாளின் வேலை... ஆகையினாலே கவனம் தேவை மேற்படியான் விசயத்தில் என்கிறார் புரட்சிக்குயில்.
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பவர்கள்... எல்லாம் கடவுள் செயல் எனும் பொல்லாங்கை பரப்புகிறவர்கள்... வாயிலிட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கவர்கள்... புண்ணிற்சரம் விடுக்கும் பொய் மதத்தின் கூட்டம் அது... எல்லாம் அவன் செயலே என்று பிறர் பொருளை  வெல்லம் போல் அள்ளி விழுங்கும் மனிதர்கள் அவர்கள்... காப்பார் கடவுள் உமைக் கட்டையில் நீர் போகுமட்டும்  வேர்ப்பீர் உழைப்பீர் என்றுரைக்கும் வீணர்கள் அவர்கள்... வாழவொட்டது அரித்துண்ணும் விஷப்பூச்சி வன் புரோகிதம்... ஆலயம் சாமி அமைத்தவர்கள்... அதன் மூலம்  அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர்கள் ஆரியர்கள்... அன்றும் வறுமை அகற்றாமல் அம்பு விக்குக் கொள்ளை நோய்போல் மதத்தைக் கட்டிய ழும் வைதீகம்... மிதிபட்டுச் சாவதற்கும் மேம்பட்டு வாழ்வதற்கும் காரணங்கள் மதி அல்ல; தலை எழுத்தே... என்பவர்கள்... மதம் வளர்ந்தால் படுபா ழாம் பகுத்தறிவு; மன்னும் ஒரு பகுத்தறிவை மாய்ப் பதற்குப் பெருங்கோயில் கட்டுவித்தவர்கள் அவர் கள்... மருட்டும் மதத்தலைவர்கள் அவர்கள்... தம்கை யில் கிடைத்தவற்றை சுருட்டுபவர்கள் அவர்கள்... நால்வருணம் விதித்தவர்கள்; மேல் வருணம் எனச் சொல்லி கோல்கொண்டு மேதினியை ஆள் வருணமானவர்கள்... ஜாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும் போதாக்குறைக்குப் பொதுத் தொழிலாளர் சமூகம் மெத்த இழிவென்றும் மிகு பெரும்பாலோரை யெல்லாம் கத்திமுனை காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகள் அவர்கள்... ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டவர்கள் அவர்கள்.
இப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்களை, ஆத்திகம் பேசி அறியாமைப் படுகுழியில் தள்ளிடும் புரோகிதர்களை முன் னிறுத்தி கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் புரட்சிக் கவிஞரின் புரட்சிப் பொறிகள் இதோ!

"உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதீகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை
உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள்
இவைகள் இதுவரை என்ன செய்தன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன?
இலட்சம் ஆண்டாய் ஈந்த தென்ன?
ஓர்யுகமாக உருட்டிய தென்ன?
சதுர்யுகமாகச் சாய்த்ததென்ன?
பசியால் மக்கள் பறக்கின்றாரே
நோயால் மக்கள் நொடிகின்றாரே
தொழிலின்றி மக்கள் சோர்கின்றாரே
வாணிபம் கெட்டு வதைகின்றாரே
கல்வியின்றிக் கலங்குகின்றாரே
ஆடையின்றி அலைகின்றாரே
வீடின்றி மக்கள் வெளிக்கின்றாரே"
இன்றும் பொருந்துவதாயிருக்கும் இந்த கேள்விக ளுக்கு பார்ப்பனப் புரோகிதர்கள், மதவெறிக் கூட்டத் தினர் என்ன பதில் உரைப்பர்?
"பேரைச் சொல்லப் பார்ப்பான் என்றான் முன் னாளில் - அவனே
பிராமணன் என்று சொன்னான் இந்நாளில்
.........................
பார்ப்பானைப் பிராமணன் என்றாய்."
"ஆரியர் பார்ப்பனர்"
"ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் பார்ப்பனர் வேறினத்தவர்"
"பார்ப்பனர் தமிழின் பகைவர்;
பைந்தமிழர் கெட்டழி வதையே
எண்ணி ஆவன செய்யும் இழிவினர்!"
பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அற்றை நாளில் தந்தை பெரியாரின் அடியொற்றி ஆரியத்தின் வீரியத்தை எதிர்த்து புரட்சிக் கவிஞர் ஆக்கிய பாடல்கள் - கருத்துகள்தாம் மேலே கண்டவை. வாழ்ந்த இனத்தை வீழ்த்திட ஆரியம் தங்களின் பேராயுதங்களாகக் கைக்கொண்டவைதாம் கடவுளும், மதமும்; ஜாதியும் சழக்குகளும்; புராணங்களும் இதி காசங்களும்; வேதக் கருத்துகளும்... மனித சமத்து வம் கோரி போராடிய பெரியாரின் இயக்கத்துக்குப் போர்க்கருவியாய் நின்று எதிர்கொள்ள உதவியது புரட்சிக்கவிஞர் கவிதைகளே. தமிழினத்து இளைஞர் களின் உள்ளத்தில் இனமானச் சூட்டினை ஏற்படுத்தி தந்தை பெரியாரின் படை வரிசையில் அணிவகுக்கச் செய்தது புதுவை தந்திட்ட புரட்சிக்குயிலின் நெருப்பு வரிகளே! மொழிப்பற்றும் இனப்பற்றும் இளைஞர்கள் உள்ளத்தில் ஏற்பட்டு மண்ணை மக்களைக் காக்கும் சுயமரியாதைப் போரில் ஈடுபட்டு அய்யா பெரியாரின் கொள்கை வெற்றிக்கு வலுசேர்க்க உதவியது புரட்சிக் கவிஞரின் பாடல்கள். இன்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் அந்தப் போர் தொடர்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனப் பாம்பு தலைதூக்குகிறது. அதிலிருந்து நமது மக்களைக் காக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது.
"தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான்
சைவப் பார்ப்பான் எப்பார்ப்பாரும்
தமிழர் தலைதடவப் பார்ப்பாரே!"
பார்ப்பனர்களிலே பல உட்பிரிவுகள் இருக்கலாம். மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில் இருக்கலாம். ஆனால் அனைவரும் ஒற்றுமையாகவே இருப்பார்கள். வேற்றுமையைக் காண்பது அரிது. அதேசமயம் மற்ற சமுதாய - இன மக்களின் பிரச் சினை என்று வரும்போது அவர்களை வீழ்த்தவே செய்வர் என்பதைத்தான் புரட்சிக்கவிஞர் மேலே கண்ட பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
“ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகள் தீர்ப்பானை
நையும் சடங்கு அகற்றி நற்றமிழர்
ஒப்பு மணம் செய்வாயா?’’
என்றும் அறிவுறுத்துகிறார்.
நால் வருணம் வகுத்து - நான்கில் மேல் வருணம் தாங்களே என்று பறைசாற்றிக் கொண்டார்கள். ஆதாரமாக மனுசாத்திரத்தையும், பாகவதத்தையும் காட்டினார்கள். 'சதுர்வர்ணம் - மயாசிருஷ்டம்' கிருஷ்ணனே பகன்றதாகவும், மனுஸ்மிருதியில் பிரம்மாவின் முகத்தில், தோளில், தொடையில், காலில் என நான்கு வருணமும் படைத்தளிக்கப் பட்டதாகவும் சொன்னார்கள். முகத்தில் பிறந்த காரணத்தால் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர்.
புரட்சிக்கவிஞர் நால்வருணப் படைப்பைப் பற்றி கோபாவேசமாகப் பதில் உரைத்தார். போக்கற்ற பார்ப்பனர்களே நீங்கள் சொல்வதில் அர்த்தம் உள் ளதா? நியாயம் உண்டா? சராசரி அறிவுள்ளவனாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்றார்.
"முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பதுவும் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே?
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக் கிலியே”
எத்தனை கோபம்! மான உணர்ச்சி உள்ளவர் யாராக இருந்தாலும் இப்படி கோபப்பட்டே தீருவர். இயற்கைக்கு மாறாக நமது இனத்தை இழிவு செய்யும் நஞ்சு கலந்த ஆரியத்தின் வஞ்சகக் கருத்துக்கு எதிராக புரட்சிக்கவிஞர் பொங்கி எழுந்ததையே இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனை எத்தனை வரிகள்... தமிழர்கள் தட்சணையாக ஆரியப் பார்ப் பனர்களுக்கு கொட்டி அழ வேண்டி உள்ளது. செத்த பின்னும் நம்மை அவர்கள் விடுவதாக இல்லையே! திதி, திவசம், புண்ணியதானம் என்ற பேரால். பார்ப்பனப் புரோகித வர்க்கம் தண்டும் தீர்வைகளை புரட்சிக் கவிஞர் எப்படி பட்டியலிடுகிறார். 'மேற்படி யான்' என்றும் பார்ப்பனர்களை நாசூக்காக அடை யாளப்படுத்துவதும் சிறப்பு.
"பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும்.
அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.
பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக வேண்டும்.
கூப்பிடு மேற்படியானை - வை தட்சணை!
பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று;
கூப்பிடு அய்யரை - கொடு பணத்தை.
பையனுக்கு கல்யாணம்! அழை அய்யரை;
சாந்தி முகூர்த்தம்; கூப்பிடு அய்யரை!
பொண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி;
கூப்பிடு அய்யரை!
பிள்ளை பிறந்தது; கூப்பிடு அய்யரை!
பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்;
உடையவர் செத்தார்,
சாகும் தருவாய் பாபம் போக
தானம் கொடுக்க, அழை அய்யரை!
செத்தபின் அழை! கொடு;
இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி
இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்;
கூப்பிடு அய்யரை!
இவையன்றி விதை நட, வீடு கட்ட - குடி போக,
பிற, பிற; அழை அய்யரை கொட்டு பணத்தை!
இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி...
அழையா வீட்டில் நுழையா சம்பந்தியாக,
கிரகண தோஷத்திற்கு 'தர்ப்பைபுல்' கொண்டு
கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும்...
சங்கராச்சாரிய ஸ்வாமிகள் கட்டணமென்று
ரசீது கொண்டும், அய்யர் தாமே
வீடுதேடி விஜயம் செய்வதுண்டு."
மேற்படியானின் வரிகள் எத்தனை... தட்சணை எத்தனை... உழைத்து சம்பாதித்த தமிழர் பணம் எப் படியெல்லாம் பிடுங்கப்பட்டுள்ளது அவாள்களால்! அறியாமையைப் பயன்படுத்தி ஆரியர்கள் செய்த அட்டகாசங்களை சமூக நோக்கோடு புரட்சிக் கவி ஞர் என்ன அழகாக படம் பிடித்துள்ளார்.
'குறிஞ்சித்திட்டு' எனும் காப்பியத்தில் ஆரிய நங்கையான விநோதை என்பாள், தாமரையிடம் தமிழர் நாகரிகத்தை தாழ்த்தி உரைப்பாள். தாமரை மூலமாக புரட்சிக் கவிஞர் விநோதைக்கு பதில் உரைப்பதுபோல 'ஆரிய நாகரிகம்' எந்த அளவு மோசமானது இழிந்தது என்பதை வரிசைப்படுத்தி உரைத்திடுவது போல தமது கருத்தை வெளிப்படுத்தி இருப்பதைப் படியுங்கள்...
''ஒருத்தியை அய்வர்மணப்ப துங்கள் நாகரிகம்!
பிச்சைப்புகல் உயர்வென்னல் உங்கள் நாகரிகம்
வருபசிக்கு மானம்விடல் உங்கள் நாகரிகம்
மங்கையரை இழிவுசெயல் உங்கள் நாகரிகம்
உருவணக்கம் செய்குவதும் உங்கள் நாகரிகம்
உயிர்கொன்று வேள்விசெயல் உங்கள் நாகரிகம்
பெருமக்கள் ஒருதாயின் மக்களெனச் சொன்னால்
பெருந்தொகைவேற் றுமைநாட்டல் உங்கள் நாகரிகம்
பழியாயிரம் செய்தும் கழுவாய்தே டிடவே
பார்ப்பானை ஒப்புவதும் உங்கள் நாகரிகம்
எழுத்திலே தலைஎழுத்தொன் றுள்ளதாம் என்றே
ஏய்ப்பானை நம்பவைத்தல் உங்கள் நாகரிகம்
பிழிந்தெடுத்த பொய்நூல்கள் மெய்ந்நூல் களென்று
பிறநாட்டார் நம்பவைத்தல் உங்கள் நாகரிகம்!
அழியாத தமிழ்நாட்டில் தமிழாலே வாழ்ந்தும்
அழியட்டும் தமிழ்என்ப துங்கள் நாகரிகம்
காதல்மனம் தீதென்ப துங்கள் நாகரிகம்
காட்டுவிலங் கைப்புணர்தல் உங்கள் நாகரிகம்
மோதிடவே இப்பிறப்பில் முற்பிறப்பு மற்றும்
மறுபிறப்புக் கரடிவிடல் உங்கள் நாகரிகம்
ஓதவரும் நீதியெலாம் பொதுவென்ப தன்றி
ஒருகுலத்துக் கொருநீதி உம் நாகரிகமே
மாதருக்குக் கற்பின்மை உம் நாகரிகமே
வாய்ந்ததமிழ் நாகரிகம் மட்டமல்ல!" என்றாள்,
இப்படியாய் பட்டியலிட்டு ஆரிய நாகரிகத்தைச் எதிர்த்துச் சதிராடுகிறார். தமிழர் நாகரிகத்துக்கு மாறானது ஆரிய நாகரிகம் என்பதை நிறுவுகிறார்.
இன்றைய நாட்டு நடப்பு - அரசியலார் எடுப்பு அவர்களின் அதிகாரத் தொடுப்பு விளக்கம் பெறச் செய்யும் வண்ணம் அன்றைக்கே புரட்சிக்கவிஞர் எத்தனை சரியாகப் படம் பிடித்துள்ளார். இதோ பாடல்....
"ஈனப் பார்ப்பனர் எடுப்பார் கைப்பிள்ளையாய்
எல்லா அரசரும் இடுப்பொடிந்தனர்!
பொல்லாச் சமயப் போக்கிலி கட்கெல்லாம்
கோயில் கட்டினர், குளத்தை வெட்டினர்
நோயில் நொடிந்தது தமிழகம்; அயலவர்
ஆட்சி ஓங்க ஆரிய நரிகளின்
சூழ்ச்சி பலித்தது, சுரண்டினர் வந்தேறிகள்"
தங்கள் கையிலே ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தாலும், மாநில அரசு தங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறது என்பதாலும் சாதாரண சவுண்டிகளும் எப்படி குத்தாட்டம் போடுகிறார்கள். குதர்க்கம் பேசுகிறார்கள். தந்தை பெரியாரை - அய் யாவின் இயக்கத்தை கொச்சைப்படுத்த எத்தனிக் கிறார்கள்.
"தமிழின் பேர்சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்திட் டாலும்
தமிழழித்துத் தமிழர்தமைத்
தலைதூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க,
நம்ப வேண்டாம்!
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்று உணர்வீர்!"
நஞ்சை விநியோகம் செய்யும் நச்சரவங்கள், தமி ழினத்தைத் தலையெடுக்கவொட்டாமல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள், தன் இனத்தின் நலனொன் றையே நோக்கமாய்க் கொண்டவர்கள் ஆரியப் பார்ப் பனர்கள் என்பதைச் சொல்லி - தமிழர் கடமை என்ன என்பதையும் சுட்டிக் காட்டிடும் புரட்சிக் கவி ஞரின் வழியிலே பணி தொடர்வோம்!

Saturday, May 2, 2020

கண்ணீரால் நன்றிதனைக் கூறு! கூறு!!

நன்றி: மே2' 2020 #விடுதலை_ஞாயிறு_மலர்

ஊர்முழுதுங் காப்பதற்கு ஓடியவர் தானிறந்தால்
உன்நெஞ்சம் வாடலையோ அய்யோ அய்யோ
சீரிழந்தாய் மானிடனே செய்ததென்ன தீச்செயலுந்
தீந்தமிழர் வாழ்ந்தநெறி பொய்யோ பொய்யோ

தூங்காமல் நாள்பொழுது தொண்டாற்றி நிற்பவர்க்குத்
தொல்லையினி தந்திடாதே அப்பா! அப்பா!!
தீங்கான நுண்கிருமி தீயிட்ட பின்னருனைத்
தீண்டுமென எண்ணிடாதே தப்பா! தப்பா!!

ஆழ்குழியில் வைத்தபின்னே அண்டாது மேலெழுந்து
அச்சத்தா லாடுவாயோ வெம்பி வெம்பி
பாழ்மடமை தள்ளிவிட்டுப் பக்கதுணை யாயிருந்து
பாராட்டு பண்புடனே தம்பி தம்பி

பூட்டிவிட்ட கோயிலுக்குள் போனதடா சாமியெல்லாம்
பொய்க்காமல் காத்ததெலாம் யாரு? யாரு??
காட்டாதே உன்குணத்தை காடுசெல்லும் வேளையிலே
கண்ணீரால் நன்றிதனைக் கூறு! கூறு!!

- சுப.முருகானந்தம்.

Tuesday, April 21, 2020

யார் மறப்பார்?

#புரட்சிக்கவிஞர்_நினைவு_நாள். #ஏப்ரல்_21

யார் மறப்பார்?

சிந்தையி லேற்றினாய் செந்தமிழ்க் தீயினைத்
தென்னவ ருள்ளந்தெ ளிந்திட வே !
தந்தையின் போர்க்குரல் சந்தத்தி லேற்றியே
தந்தது நீயல்லால் வேறில்லை யே !!

முந்தியி ருந்தவர் தந்ததெ லாம்புது
மொந்தையி லேபழங் கள்ளில்லை யோ !
கந்தையி லாதவர் கஞ்சியி லாதவர்
கண்டது முன்கவித் தேனில்லை யோ !!

பள்ளிக்குச் செல்லடி பாவையுன் னைப்பூட்டப்
பார்ப்பா ரைத்தள்ளி யென்றவ ரே !வெள்ளைநி லாவினை வெண்சோற்றுப் பானையில்
வீட்டின டுப்பினில் கண்டவ ரே !!

வெள்ளத்தில் வெள்ளங்க லந்தது போல்மனம்
மெல்லக்க லப்பது காதலென் றாய் !
அள்ளக்கு றையாத அந்தமிழ் பாச்சுவை
ஆயிரந் தந்ததை யார்மறப் பார்?
            - சுப.முருகானந்தம்.

Friday, March 27, 2020

கொரானா - தாண்டுவோம் இந்தப் பேரிடர் நாளே!

போடென்றான் வீட்டுக்குள் பூட்டு - நாம்
போட்டாலே நிற்குமா வாயூறும் பாட்டு
கேடென்று சொல்லவே  கேட்டு - உறவுங்
கிட்டவ ராமல்தான் வைத்தோமே வேட்டு!!
                                      (போடென்றான்)
யாருமே யெண்ணினோ மில்லை! - இந்த
ஞாலமி துபோலக் கண்டதே யில்லை!!
போருக்குங் கொட்டுவான் கோடி! - இந்தப்
பொல்லாத நோய்வெல்லக் கண்டானா தேடி!!
                                         (போடென்றான்)

திண்டாடி நின்றோமே வாடி - பசித்
தீர்த்திட யார்தந்தார் நம்மையே நாடி
அன்றாடங் காய்ச்சிகள் வாட்டம் - அதில்
ஆள்வோருக் கெப்போது மில்லையே நாட்டம்!!
                                             (போடென்றான்)

வாயிலே செய்கின்றார் ஜாலம் - அவர்
மாறுவ தென்றென ஏங்குவோம் நாளும்
நோயினை வோட்டவென் செய்வார் - இல்லை
நொந்தபின் வந்திங்கோ ஆறுதல் சொல்வார்
                                        (போடென்றான்)
                 

ஆயினும் நம்பிக்கை கொண்டு! - நாம்
அத்தனை பேருமே ஒன்றாக நின்று!!
தாயினைச் சேயினைப் போலே! - சேர்ந்து
தாண்டுவோ மிந்தப் பேரிடர் நாளே!!
                                         (போடென்றான்)

Sunday, March 1, 2020

அப்பா....!!

#அப்பா

காட்டிலு மேட்டிலு நானே - கண்ணில்
கண்டதை மெய்யென நம்பிவைத் தேனே

கூட்டினில் முட்டையென் றென்னை - வைத்துக்
கூட்டினா யின்னுயிர் வாழ்வது தன்னை

ஊட்டினா யின்பத்தேன் நாவில் -  வெற்றி
ஊன்றினாய் வாழ்வினில் ஒவ்வொரு நாளில்

கேட்காமல்  தந்தாய்நீ யாவும் - உனக்
கேதுநான் தந்தேனோ இத்தனை நாளும்

வாட்டத்தை நான்கண்ட தில்லை - நான்
வாடநீ கண்டுமே நின்றது மில்லை

பாட்டொன்றில் சொல்லவோ வந்தேன் - உயிர்ப்
பாலாதால் உன்னைக்கு ளிப்பாட்ட வந்தேன்

ஆட்கொள்ள வேண்டும்நீ அப்பா -  உன்
அன்பொன்றே நான்கேட்டேன் அஃதென்ன தப்பா?

Thursday, December 5, 2019

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?
(எண்சீர் விருத்தம்)
                            கவிஞர்.சுப.முருகானந்தம்.மதுரை

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை
தறிகெட்டுக் கிடக்கிறது சட்டம் நீதி
கட்டவிழா மொட்டுக்கள் கருகிச் சாகக்
காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்
எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்
எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்
கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு
கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!

எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்
இனமானம் காப்பதற்குச் சூளு ரைப்போம்
நட்டமெனத் தந்துவுயிர் நாடு காக்க
நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை
வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை
வாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை
"விட்டோமா பார்"என்றே வினைமு டிக்கும்
வீரமணிப் பெருங்கூட்டம் யாரே வெல்வார்?

எட்டொன்று வயதினிலே மேடை ஏறி!
இன்றுவரை வழங்குகின்றாய் உழைப்பை வாரி!!
தொட்டாலே தீட்டென்ற சோகம் போக்கத்
தொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி!
கட்டாக ஆதாரங் காட்டிக் காட்டிக்
கனிவாக 'அருள்கூர்ந்து' கேட்கச் செய்துப்
பொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்!
போனதிசை தெரியாமல் மடமை போகும்!!

சிட்டாக நீயிருந்த போதில் சீறிச்
செருக்குற்றப் பகையழிக்கப் போரும் செய்தாய்!
பட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே
பார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்!!
கிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்
கேடர்களின் கொடுசெயலால் போன தய்யா!
"எட்டாதோ?" எனவேங்கும் எளியார்க் கெல்லாம்
என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?

Monday, November 25, 2019

#Asiriyar_k_veeramani #Quotes#

#ஆசிரியர் #கி_வீரமணி #Asiriyar_k_veeramani #Quotes
#ஆசிரியர்_மொழிக்_குறள்_வெண்பா
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!