Thursday, December 5, 2019

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?
(எண்சீர் விருத்தம்)
                            கவிஞர்.சுப.முருகானந்தம்.மதுரை

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை
தறிகெட்டுக் கிடக்கிறது சட்டம் நீதி
கட்டவிழா மொட்டுக்கள் கருகிச் சாகக்
காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்
எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்
எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்
கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு
கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!

எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்
இனமானம் காப்பதற்குச் சூளு ரைப்போம்
நட்டமெனத் தந்துவுயிர் நாடு காக்க
நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை
வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை
வாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை
"விட்டோமா பார்"என்றே வினைமு டிக்கும்
வீரமணிப் பெருங்கூட்டம் யாரே வெல்வார்?

எட்டொன்று வயதினிலே மேடை ஏறி!
இன்றுவரை வழங்குகின்றாய் உழைப்பை வாரி!!
தொட்டாலே தீட்டென்ற சோகம் போக்கத்
தொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி!
கட்டாக ஆதாரங் காட்டிக் காட்டிக்
கனிவாக 'அருள்கூர்ந்து' கேட்கச் செய்துப்
பொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்!
போனதிசை தெரியாமல் மடமை போகும்!!

சிட்டாக நீயிருந்த போதில் சீறிச்
செருக்குற்றப் பகையழிக்கப் போரும் செய்தாய்!
பட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே
பார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்!!
கிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்
கேடர்களின் கொடுசெயலால் போன தய்யா!
"எட்டாதோ?" எனவேங்கும் எளியார்க் கெல்லாம்
என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!