Friday, March 27, 2020

கொரானா - தாண்டுவோம் இந்தப் பேரிடர் நாளே!

போடென்றான் வீட்டுக்குள் பூட்டு - நாம்
போட்டாலே நிற்குமா வாயூறும் பாட்டு
கேடென்று சொல்லவே  கேட்டு - உறவுங்
கிட்டவ ராமல்தான் வைத்தோமே வேட்டு!!
                                      (போடென்றான்)
யாருமே யெண்ணினோ மில்லை! - இந்த
ஞாலமி துபோலக் கண்டதே யில்லை!!
போருக்குங் கொட்டுவான் கோடி! - இந்தப்
பொல்லாத நோய்வெல்லக் கண்டானா தேடி!!
                                         (போடென்றான்)

திண்டாடி நின்றோமே வாடி - பசித்
தீர்த்திட யார்தந்தார் நம்மையே நாடி
அன்றாடங் காய்ச்சிகள் வாட்டம் - அதில்
ஆள்வோருக் கெப்போது மில்லையே நாட்டம்!!
                                             (போடென்றான்)

வாயிலே செய்கின்றார் ஜாலம் - அவர்
மாறுவ தென்றென ஏங்குவோம் நாளும்
நோயினை வோட்டவென் செய்வார் - இல்லை
நொந்தபின் வந்திங்கோ ஆறுதல் சொல்வார்
                                        (போடென்றான்)
                 

ஆயினும் நம்பிக்கை கொண்டு! - நாம்
அத்தனை பேருமே ஒன்றாக நின்று!!
தாயினைச் சேயினைப் போலே! - சேர்ந்து
தாண்டுவோ மிந்தப் பேரிடர் நாளே!!
                                         (போடென்றான்)

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!