Wednesday, March 9, 2011

விடுதலை - Periyar Viduthalai Tamil Daily News Paper | தொலைக்காட்சியால் ஏற்

விடுதலை - Periyar Viduthalai Tamil Daily News Paper | தொலைக்காட்சியால் ஏற்

தொலைக்காட்சியால் ஏற்பட்ட கொலைக்காட்சி!

தொலைக்காட்சி என்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஊடகம்தான். ஆனால் பொழுது முழுவதையும் அதற்கே செலவிடும் நிலை நம் நாட்டு மக்களில் குறிப்பாக இளைஞர்கள், தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரும் தீமையை உருவாக்கி உடல் நலம், உள்ள நலம், நேரம் - இவற்றையெல்லாம் பாழாக்கும் நிலை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறது!

அறிவியல் கண்ட கண்டுபிடிப்பான தொலைக்காட்சியில் அறிவியலுக்குக் கேடு செய்து, மூடநம்பிக்கைகளை, மூளையில் ஆணியடிக்கும் பல்வகை மதவெறிகளைப் பரப்புவதும் மலிந்துவிட்டது.

மதவாதிகள் இதுபோன்ற பல தொலைக்காட்சிகளை தங்களது சொந்த உடைமைகளாக சுமார் 100 - god TV - கடவுள் டி.வி.யிலிருந்து அனைத்து மதவாதிகளும், அடிப்படை மத வெறியர்களும்கூட (Religious Fundamentalists) இப்படி ஒரு வழியில் மக்களின் மூளைக்கு சாயம் ஏற்றி, விலங்கு போடவும் செய்கின்றனர்!

டிஸ்கவரி ஒளிவழி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல், அனிமல் (மிருகம்) பற்றி இப்படி இயற்கையையொட்டிய டி.வி.களைப் பார்ப்பவர் - நம் நாட்டில் மிகவும் குறைவு. பகுத்தறிவாளர்கள் இல்லத்துப் பிள்ளைகள் - குழந்தைகளைக்கூட இவற்றைப் பார்க்கத் தூண்டுவது கிடையாது நமது பெற்றோர்கள்.

தேர்வு நேரத்தில் உலகத் தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்ற கொள்ளைக் கூட்டு சூதாட்ட பேரம் உள்பட பல ஆயிரக்கணக்கில் ஏழைகள், நடுத்தர மக்களின் பணம் உறிஞ்சப்பட்டு, மாணவர்களின் படிப்பிலும் மண்ணைப் போடும் கொடுமையைக் கண்டிக்க எவரும் முன்வருவதில்லை.

காரணம் ஆட்சியாளர்களிலும் பலருக்கு இந்தப் போதை உண்டு. சில கனவான்கள் பன்னூறு - ஆயிரம் - லட்சம் கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளவர்கள் இந்த கிரிக்கெட் மோகத்தைத் தூண்டி, அதனை தமது பணப்பெட்டிக்குள் கொண்டு செலுத்தி, திடீர் என்ற கொள்ளை லாபக் குபேரர்களாகி நிற்கின்றனர்!

அறிவுக்கோ, உடலுழைப்புக்கோ, உதவும் விளையாட்டு கூட அல்ல; இதனைக் காண தொலைக்காட்சி ஊடகங்களில் ஏலம் - அதில் ஊழல் - அதன்பின் விசாரணை - இப்படி பலப்பல அரங்கேறுகின்றன ஒவ்வொரு நாளிலும்!

என்றாலும் தொலைக்காட்சி என்ற இந்த தொல்லைக்காட்சி முன் அமர்ந்து பார்த்து காலத்தைக் கழிப்பது ஒருபுறமிருந்தாலும், பல குடும்பங்களில் வீண் தகராறு - வாய்ச்சண்டையாகத் துவங்கி, முற்றிய நிலையில் அண்ணன் - தம்பி, அப்பா - மகன் கொலையில் முடியும் உயிர்க் கொல்லியாகவும் ஆகிவிடுகிறதே!
தொலைக்காட்சியில் அடிக்கடி சேனல்களை மாற்றிட பல குடும்பத்தவரிடம் வாக்கு வாதங்கள்!
ஒருவர், இதை நான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போது, வாய்த் தகராறில் துவங்கி, அடிதடி கொலை வரையில் சென்று முடிகிறது.

இரண்டு நாள்களுக்கு முன் வடசென்னையில் இப்படி ஒரு கொலை - தந்தைக்கும் மகனுக்கும்; தொலைக்காட்சியில் ஒலியை (Volume - அய்) சற்று அதிகரிக்கச் சொல்ல, அவர் மறுக்க, அதில் துவங்கி கத்தியால் குத்தி, உயிரைப் பலிகொண்டுவிட்ட சம்பவம் எவ்வளவு வெட்கமானது! வேதனைக்குரியது!

தொலைக்காட்சி - கொலைக்காட்சியை உருவாக்குவதைவிட மிக மோசமான ஒரு நிகழ்வை கற்பனையால்கூட எண்ணிப் பார்க்க முடியுமா?

நான் பலமுறை எழுதியுள்ளேன்; மீண்டும் சொல்லுகிறேன். உணவுக்கு உப்பு தேவைதான்; ஆனால் உப்பே உணவாகிவிட்டால், உடல் நலம் என்னவாகும்?

பொழுதுபோக்கு (recreation) என்பது ஓய்வு நேரத்தைச் செலவழிக்கும் இளைப்பாறும் வழி; ஆனால் அதுவே 24 மணிநேரமும் என்றால் அது பொழுதுபோக்காகுமா? பொழுதையே போக்குமா? இளைப்பாறுதல்தான் ஆகுமா? யோசியுங்கள் நண்பர்களே!


Monday, March 7, 2011

விடுதலை - Periyar Viduthalai Tamil Daily News Paper | தவிர்க்க கூடாத பத்து �

விடுதலை - Periyar Viduthalai Tamil Daily News Paper | தவிர்க்க கூடாத பத்து �

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

நம் உடல் பாதுகாப்பாக இயங்க மிகச் சிறந்த பத்து உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும்.

நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:
மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்களாம்.

இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலஸ்டிரால் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.

நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இரசாயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரௌன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால், மீன் மற்றும் நண்டு : அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலடைக்கட்டி:
சீஸ் உள்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருள்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.




தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!