Thursday, March 14, 2019

பெண்ணும் ஆணும் சமமே

#பெண்ணே_நீயுனைப்_போற்று

1.பெண்ணுடன் ஆணும் பிறப்பால் சமமெனும்
உண்மை தெளிதல் உயர்வு.

2.எதுவும் இருவருக்கும் எப்போதும் ஒன்றே
பொதுவாக்கு நீதொடுத்து போர்.

3.நிற்பாளே தானாய் நிமிர்ந்து உலகமவள்
சொற்படி கேட்கும் சுழன்று

4.அறமும் மறமும் அறிந்தவள் பெண்ணே
மறந்தவன் வாழ்வினில் மண்.

5.மண்ணையும் பொன்னாக்கும் வன்திறம் கொண்டநல்
பெண்மையே ஞாலத்தின் பீடு.

Monday, March 4, 2019

வீரவணக்கம் மகளே!

வீர வணக்கம் மகளே!
நீ பிறந்த நாளில்....



நித்தம் நித்தம் நெஞ்சில் வருவாய்
சித்தம் கலங்கச் சிந்துவோம் கண்ணீர்
மெத்தப் படித்து மேல்நிலை யுற்றுநீ
நத்தும் இனத்தின் நலந்தனைக் காப்பாய்
என்றே இருந்தோம் எம்மறச் செல்வியே
கொன்றுனைத் தீர்த்தனர் கொடுமதி ஆள்வோர்
நின்று நிலவும் நின்புகழ் நிலத்தில்
வன்மம் தீர்ப்போம் வருநாளில்
உன்மனம் நினைத்ததை உறுதியாய் செய்தே!
- சுப முருகானந்தம்.
(நேரிசை ஆசிரியப்பா)

Sunday, March 3, 2019

துடிக்குதே தமிழர் தோளே

தேரினில் சென்றார் தன்னைத்
தெருநாயும் குலைத்த தைப்போல்
வேரெனத் தமிழர் கண்ட
வேந்தனைக் கொல்வோ மென்று
சீறினான் பார்ப்பான் இன்று
சிகைதனை மூடிக் கொண்டு
ஏறிவா இரண்டில் ஒன்று
இருக்குமா பார்ப்பான் பூண்டே!

நாட்டினின் தந்தை தன்னை
நாங்களே கொன்றோம் என்று
ஏட்டினில் எழுதிச் சொன்னான்
எங்குதான் போனான் ஆள்வோன்
கூட்டினில் அவனைத் தள்ளக்
கொடுக்கவே குரலை ஓங்கி
நாட்டினில் பற்று கொண்டோர்
நானெனச் சொன்னோர் எங்கே?

இருக்குதா அரசும் நாடும்
இருக்குதா காவல் நீதி
பொறுக்குமா தமிழர் நெஞ்சம்
போர்க்கள மாக்க நாட்டை
தறுக்கியே திரிவார் தம்மை
தடுத்திடு அரசே நீயும்
சுருட்டுக பார்ப்பான் வாலை
துடிக்குதே தமிழர் தோளே!!

கற்றபடி நிற்பீர்

கவியரங்கம் 160
தலைப்பு: கல்விக்கழகு

தமிழ் வாழ்த்து:

எண்ணம் முழுதும்நீ என்றும் நிறைந்துநல்
வண்ணம் மனம்புகுந்து வாழும் தமிழே
வணங்கியே நின்றேன்  வருக
இணங்கியே எல்லாம்  இயைந்து தருகவே!

தலைமைக்கும் அவைக்கும் வணக்கம்:

அவையின் தலைமையீர் அன்பு வணக்கம்
சுவைக்குமத் தேனைத் துகிக்கு மிதரெனச்
செந்தமிழ்ச் சோறுண்ணத் தந்தீர் நிலாமுற்றம்
தந்தேன் வணக்கம் மகிழ்ந்து.

துணைத்தலைப்பு: கற்றபடி நிற்க.

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

(விளம், மா,தேமா வாய்ப்பாடு)

சுற்றிய சுற்றும் மாடும்
சொல்லிய சொல்லுங் கிள்ளை
கற்றதை அன்றே விட்டு கலங்கியே தவிக்கும் பிள்ளை
நற்றமிழ் நெறிகள் சொல்லும் நலனதைக் கொண்டே யாரும் இன்றைநாள் வாழ்வ துண்டோ
எண்ணியே பார்ப்போம் இன்றே!

கற்றதைச் செயலில் காட்டி
கனிவினைச் சொல்லில் தேக்கி
மற்றவர் நலத்தைப் பேணும் மாண்பினை நெஞ்சில் கொண்டு
பெற்றதைப் பிறர்க்கு நல்கி பெருமையும் சேர்த்து நன்றே சுற்றமும் சூழ வாழும்
 தூயவர் எவரும் உண்டோ?

படித்ததை மதிப்பெண் வாங்கும்
பாதையாய் மனதில் எண்ணி துடித்துமே வேலை தேடி
தொண்டையின் மேலே நின்று இடிப்பதைத் தேர்வில் சொல்லி இடத்தினைப் பெறுவார் கோடி நடிக்கவும் செய்வார் நல்ல ஞானமும் பெற்றார் போலே!

சொல்லிய கருத்தைப் பார்நீ
சொன்னவர் யாரென் றாலும்
துல்லிய கோலில் இட்டே
தூயதை ஏற்றுக் கொள்க!
சொல்லினில் எட்டிக் காயைத்
தூரநீ எறிவாய் கண்ணே!
வெல்லமாய் கனிந்த வார்த்தை
விதையினால் வளர்ப்பாய் நட்பே!!

அறத்தினை மனதில் ஏற்றி
அருளினால் ஞாலம் போற்றி
பிறந்தவர் யார்க்கும் யாரும்
பேதமில் லென்னும் கொள்கைத்
திறத்தினால் உழைத்து நல்ல
சிறப்பினைப் பெற்று வாழ்வாய்
செந்தமிழ் கற்று நின்றே!

முடிவுரை:

வள்ளுவன் சொன்ன பாடம்
வந்துநான் சொல்ல வந்தேன்
வாழ்வினில் ஏற்று வாழ்ந்தால்
வரும்படி யாக நல்ல
தாழ்விலா வாழ்வும் கிட்டும்
தமிழினை உலகம் மெச்சும்
ஊழென ஒன்றும் இல்லை
உறுதிநீ கொண்டே வெல்க!!

நன்றி நவிலல்:

கற்றபடி நிற்க
கவிவடிக்க எனக்கு
நல்வாய்ப்பு தந்தீர்
நன்றி பல கோடி..
வணக்கம்.
சுப.முருகானந்தம் 2465 நிலா முற்றம் எனும் முகநூல் குழுமத்தில் வார இறுதியில் நடக்கும் கவியரங்கத்திற்கு எழுதியது.
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!