Sunday, August 4, 2013

நட்பே ...!

நட்பே ...! 

எங்களுக்கு 
காலம் செய்த 
ஒரே ஒரு நல்ல கைங்கரியமே...! 
நாங்கள் 
சோதனைக் கடலில் 
துடிக்கும் போதெல்லாம் 
எங்களுக்கு 
வெற்றிக்கரையை காட்டுகின்ற 
கலங்கரை விளக்கு நீதான்....!! 
நீ எங்கள் 
சிறு வயதில் தொடக்கம்... 
ஆனால் 
இன்று எங்கள் 
உயிர்களும் உன்னுள் அடக்கம்...! 
எங்கள் சிந்தனைகளின் கருவறையே...! 
எங்களுக்குள் 
எதையும் எப்போதும் 
எங்களால் 
"செய்ய முடியும்" என்றிருகின்ற 
தன்னம்பிக்கையும் நீதான் ...! 
உன் கைகளின் அரவணைப்பில் தான் 
எங்கள் மீதே எங்களுக்கு 
நம்பிக்கை பிறக்கின்றது ... 
உன் கால்களின் சுவடுகளில் தான் 
எங்களின் பயணம் தொடர்கின்றது...! 
உன் 
அன்புப் பிணைப்பினிலே 
ஆயிரம் தாய்களின் பாசம் புரிகிறது ... 
உன் ஆலோசனைகளிலோ 
கோடித் தந்தைகளின் 
அனுபவம் தெரிகிறது .... 
எங்களை மனிதர்களாக்கிய புனிதனே...! 
உனது அறிமுகத்துக்கு பிறகுதான் 
மனிதர்களையே நாங்கள் 
சரியாக புரிந்துகொள்ள பழகினோம் ...! 
நிராதரவான பகல்களுக்கு பின்னால் 
நீ 
நிலவாக வரும் இரவுகளில் தான் 
நாங்கள் 
தூக்க நிம்மதியைச் சந்திக்கின்றோம்...! 
எங்களின் அரிச்சுவடியே ...! 
நீதான் எங்களுக்கு ஆசிரியரும்....!! 
கல்விகூடங்களில் 
எங்களுக்கு 
"உலக சரித்திரத்தைத்" தான் 
பாடமாக சொல்லித்தந்தார்கள் ...! 
ஆனால் எங்கள் சரித்திரத்தில் 
உனது பள்ளியில் தான் 
நாங்கள் 
உலகத்தையே 
பாடமாக படிக்கின்றோம் ...!! 
நட்பே..... ! 
எங்களின் ஏக்க மனதுகளை 
எளிதாக்கி விடும் தந்திரமே ...! 
காலம் எங்களுக்குச் செய்த 
ஒரே ஒரு நல்ல கைங்கரியம்.. 
நீ மட்டும் தானே... !!


                 - சுப.முருகானந்தம் ( இக்கவிதையை வெளியிட்ட 'eluthu.com'க்கு  நன்றி )

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!