Thursday, September 26, 2019

தம்பி. செ.சுப்பிரமணியன் முதலாமாண்டு நினைவுநாள்

#ஆசிரியன்
பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!
விடுதலை வேண்டி விலையென் றுயிரைக்
கொடுவெனக் கொற்றவன் கூறக் கொடுத்தாய்
வடுவென நெஞ்சில் வரைந்தவுன் கோலம்
விடுபடு மோவெமை விட்டு.

செப்'26 திலீபன் நினைவு நாள்.

Friday, September 20, 2019

அவர்தாம்_பெரியார்



#பெரியார்141.

#அவர்தாம்_பெரியார்

கேள்வி கேட்பவன் நாவில் இருப்பார்
கேட்டுத் தெளிபவன் நெஞ்சில் இருப்பார்
வேள்வி யாலனைத்தும்  விளையு மென்பானின்
விலாவினை முறித்து வேலெனக் கிளர்வார்.
                                                (கேள்வி)
நாள்பலன் பார்த்து நடுங்கிச் சாவோர்
நல்வழி யுணர்த்தும் நண்பனாய் நிற்பார்
தோள்வலி மறந்து தொண்டறங் காக்கும்
தூயவர் வாழ்வில் சுடரென ஒளிர்வார்
                                                 (கேள்வி)
மான அறிவின் அழகில் சிரிப்பார்
மனிதர் ஒழுக்க நெறியில் இருப்பார்
காலந் தோறும் பேதங் களையும்
களத்தில் தானே கருத்தாய் நிற்பார்
உலகை ஒன்றாய் ஆக்கத் துடித்து
உரிமை கோரி ஓங்கி ஒலிக்கும்
கலகக் குரலின் கனலாய் இருப்பார்
கறுக்கல் விலக்கும் சிவப்பாய் மிளிர்வார்
                                                       (கேள்வி)

Sunday, September 15, 2019

#பேரறிஞர்_அண்ணா_பிறந்தநாள்

வழுவிலா குறள்நெறி வாழ்வினைக் கற்றவன்
முழுவதும் இத்தரை முத்திரை பதித்தவன்
கொலுவினில் இருப்பினும் குடிசையில் வாழ்பவர்
விழிகளின் சிரிப்பினை விளைக்கவே விழைந்தவன்
ஆரிய மாயைகள் அனைத்தையும் விளக்கியே
போரினைத் தொடுத்தவன் பொசுக்கிட அழைத்தவன்
இந்தியைத் திணித்துமே எம்மொழி அழித்திட
வந்தவம் மந்திகள் வாலினை அறுத்தவன்
மன்னவன் சொன்னசொல் போற்றியே
இன்தமிழ் நாட்டினை ஏற்றுவோம் பாரிலே!!

Thursday, September 5, 2019

ஆசிரியர்தினத்தில்..

#ஆசிரியர்தினத்தில்.....

எல்லோரும் கல்விபெற்று ஏற்றமுற வேண்டுமென
கல்லாரின் கல்லடிக்கும் கற்றவரின் சொல்லடிக்கும்
நில்லாது நாட்டின் நிலைமாற்றிச் சென்றவர்தம்
நல்நினைவைப் போற்றுவோ மின்று.

Friday, August 30, 2019

பைந்தமிழ் மொட்டுகளுக்குத் தாலாட்டு

ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...

(1)ஆரா வமுதே! அருந்தமிழர் காப்பியமே!!
தேரா தெதையுந் தெளியாத் தென்னகமே!!
பொன்வான் கதிரே! புவியில் பிறந்தோரெல்லாம்
உன்றன் உறவென்றே ஓதவந்த பேரருளே!!(2)
நூறாயி ரமாண்டு நுடக்கிவைத்த மதஞ்சாதி,
கூராய்ந்துக் குப்பையெனக்
கொளுத்தவந்த பகுத்தறிவே!!(3)
வேராங் கிளைகளையே விருந்தோம்பித் தாங்குதற்கே
சீராய்ப் பிறந்துவந்த செல்லமே கண்ணுறங்கு!!.... செல்லமே கண்ணுறங்கு!!
செங்காந்தள் பூச்சரமே!! செந்தமிழே !!!
நீயுறங்கு!!....செந்தமிழே !!!
நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...
(5)
கானக் குயில்மொழியே! கட்டிவைத்த மல்லிகையே!!
மானம் அழகென்னும் மாத்தமிழர் பண்பாடே(6)
கூனில் முழுநிலவே! குதித்தாடும் மயிலழகே!!
வேனில் முடித்துவைக்க வீடுவந்த தென்காற்றே!!(7)
ஆனிப்பொன் தொட்டிலே! அழகேநீ கண்ணுறங்கு!!
அன்னச் சிறகாலே! அடுக்கிவைத்த மெத்தையிலே!!
சின்னக் கண்மூடி சிணுங்காமல் நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...

(8)
அய்யன் சொன்னகுறள் அழகாக எடுத்தியம்பிப்
பொய்யர்  புரட்டுகளைப் புறங்காணச் செய்வாயோ(9)
உய்யும் வழிதேடி உலழு முலகோர்க்கு
பொய்யா மொழிசொல்லி பொருளு முரைப்பாயே(10)
உண்ணல் சமனாக்கி உழைப்பும் பொதுவாக்கி
உலகம் ஒன்றாக்க உறுதி கொள்வாயோ(11)
நம்மில் பிளவாக்கும் நரியார் செய்கையெண்ணி
விம்மி யரற்றாமல் வேங்கையே! நீயுறங்கு!!
வேங்கையே! நீயுறங்கு!!
வேளை வரும்   கண்ணுறங்கு!
வேளைவரும்...... கண்ணுறங்கு !!

கலைவாணர்


கலைவாணர்

நினைவு நாள்


கிந்தனா ரென்றுபேர் சாற்றி - நீ
கேடாம்ப ழங்கதை மாற்றி - ஒரு
கிளிபோலவும் மொழிபேசிய
திரையோவியம் மறைந்தேகிடக்
கிளர்ந்தாய்! - புகழ் - அளந்தாய்!!

வந்தப டத்தினி லெல்லாம் - நீ
வந்துக தைத்தன வெல்லாம்
மனையாளவள் அறிவாகிய
துணையேகவு விதைதூவிய
வழியே! - அறிவின் - ஒளியே!!


வாடிய உள்ளங்கள் பார்த்து - நீ
வாரிவ ழங்கினாய் ஆர்த்து - உன்
மனமாகிய கடலேயொரு
அலையாகிய பொருளேதரு
மன்றோ - அருள் - குன்றோ!!


 தேடிய செல்வங்கள் தீர்த்து - நீ
சென்றாயோ மாண்பினைச் சேர்த்து - அத்
திரைவானதில் நிலவாகியும்
மறையாதொரு புகழாகியும்
சென்றாய் - எம்மை - வென்றாய்

Wednesday, August 7, 2019

வீட்டிற்கு வரப்போகும் புதுவரவிற்கு வரவேற்பு


எடுப்பு:
பொன்னே புதுவானே
பொன்னின் மணியென
பூப்பாய் இந்நாளே..

உந்தன் முகங் காணத்தான் தவிக்கின்றோம்..

உன்மழலை கேட்கத்தான் துடிக்கின்றோம்

தேரில் வாராய் துன்பந் தீரவாராய்

தொடுப்பு 1:
அன்னைத் தமிழின் அழகென வருக...
தந்தை குணத்தில் தளிரென வருக...

எங்கள் இனங் காப்பாய் தேனின்
இனிய தழிழாளே...

ஊரே கூடி உனைப் பார்க்கவே...
உறவும் பாடி உனை வாழ்த்தவே..
(பொன்னே..புதுவானே)

தொடுப்பு 2;
நாளை யெண்ணி நாங்களு மிருப்போம்

நங்கை முகங் கண்டு நகைப்பினில் குதிப்போம்...

நாட்டையு மறவாதே அம்மாநீ
நன்றியு மறவாதே

வாநீ யிங்கு வளருங் கதிர்
வந்தால் தானே புலரும் புவி...
(பொன்னே..புதுவானே)

சுப முருகானந்தம்.
உறுப்பினர் எண் வழங்கப்படவில்லை அம்மா

Wednesday, July 24, 2019

மணநாள் வாழ்த்துகள்....

மணநாள் வாழ்த்துகள்....

 கொள்கைச் சான்றோர்கள் பி.வரதராசன் அமுது.ரசினி இணையருக்கு...

கற்பன கற்றுமே காசுபணஞ் சேர்க்கவே
காளைய ரெண்ணிக் களம்புகு வேளையில்
நற்றவம் போலுமே நானில நன்மைக்கு
நாளு முழைக்கவே நாடினோர்; வாழ்வினில்
பெற்ற பயனெல்லாம் பெரியாரின் தொண்டரென
பேருவகை கொண்ட பெருமையே யல்லாமல்
மற்றவை தேடாத அண்ணன் அண்ணி
மணவாழ்வும் கொள்கை வளர்வாழ்வு தானே!!
 (வெண்டளையான் இயன்ற எண்சீர்  விருத்தம்)

பகுத்தறிவை நாடு...!!

கீழென்று மேலென்று கீறிப் பிளக்காமல்
பாழென்ற சாதிமதப் பாட்டினில் வீழாமல்
ஒன்றே அனைவரும் ஓர்நிலை என்றுணர
நன்றாம் பகுத்தறிவை நாடு.
(இன்னிசை வெண்பா)
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!